Thursday, May 9, 2013

கடைசிப் பந்து - நாடகம்




கிரிக்கெட் ரசிகர்களுக்கான வாழ்க்கை நாடகம்
 
நாடகமாக்கம்: நித்யா:
 

(நாடக மேடையின் மூடிய திரையின் முன்பு நாடகப் படைப்பாளி ஒலிபெருக்கியில் பேசுகிறார்)

ரசிகர்களே, இது கிரிக்கெட் பாணியில் அமைக்கப் பட்ட ஓரங்க, வாழ்க்கைப் போட்டி நாடகம். எதிர்பாராத திருப்பங்கள், கணிக்க முடியாத வெற்றி- தோல்வி ஆகிய தனித் தன்மையால் கிரிக்கெட் விளையாட்டு நம்மை வெகுவாகக் கவர்கிறது; முக்கியமாக, முடிவு என்ன ஆகுமோவென பதைபதைக்க வைக்கும் சூழ்நிலையில் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்தக் கடைசிப் பந்து!

(திரை விலக, நாடகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக அணி வகுக்க, நாடகாசிரியர் அறிமுக உரையைத் தொடர்கிறார்)

இதோ, கையில் கிரிக்கெட் மட்டையுடன் நுழைபவன் திவாகர் . கடைசிப் பந்தை எதிர்கொள்ளப் போகும் இந்த திவாகர்,  வாழ்க்கைப் போட்டியில் வெற்றிக்கு வெகு அருகில் வந்திருக்கிறான்! அடுத்து, கையில் பந்துடன் வருபவன் பரத்- இவன் வீசப் போகும் கடைசிப் பந்தால் திவாகர் ஜெயிப்பானா, தோற்பானா என்பதே கதை! இதோ, கையில் வெற்றிக் கோப்பையுடன் ஒயிலாக நிற்பவள் வீணா - ஜெயிப்பவனுக்கு மாலை சூடக் காத்திருப்பவள். திவாகரைத் தோல்வியடையச் செய்து, வீணாவை தூரத்துச் சொந்தக்காரன் பரத்துடன் சேர்த்து வைக்கும் முனைப்புடன் இதோ நிற்பவள் விக்கெட் கீப்பர் மீனாட்சி - வீணாவை வளர்த்து ஆளாக்கியவள்.  போட்டியின் முடிவை இதோ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்- வீணாவின் பெற்றோர் மூர்த்தி, விசாலம் , உறவினர்கள் நாகராஜன், வேம்பு மற்றும் திவாகரின் நண்பன் மாசி. முத்தாய்ப்பாக, முந்திரிக் கோட்டை மாதிரி தன்னையே அம்பயராக வரித்துக்கொண்டு நிற்கும் கோழி கோபால்- எல்லாப் பிரச்சினைகளையும் கோழி மாதிரி கிளறி விடுவதில்  மன்னன்!

இனி, கடைசிப் பந்து  நாடகம் ஜாலியாக ஆரம்பம்!

காட்சி 1:

(மூர்த்தியின் வீட்டு ஹால் ... டீவீ எதிரே மூர்த்தியும், விசாலமும் அதை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். கோழி கோபால் உள்ளே நுழைகிறார்)

மூர்த்தி: அடடே... வாடா கோழி ......விசாலம்...ஆபீஸ்ல என்னோட வேலை பாத்த கோபால் பத்தி சொல்லியிருக்கேனே... இவன் தான்...எல்லா விஷயத்தையும் கோழி மாதிரி கிளறுவான் .. உக்காருடா கோபால்
 
கோபால்:  சாரிடா மூர்த்தி... நீங்க டீவீ பார்துக்கொண்டிருக்கப்ப  நான் கரடி மாதிரி வந்துட்டேன்!
 
விசாலம்: ஏங்க... இவர் கோழியா... கரடியா?

மூர்த்தி: கிளரினா கோழி... இப்படி சொல்லாம கொள்ளாம வீட்டுக்குள்ள நொழஞ்சா கரடி.. மத்த நேரத்தில வெறும் கோபால்... சரியாடா?

கோபால்:  அதை விடு... (எட்டிப் பார்த்துவிட்டு) என்னடா மூர்த்தி... டிவியில படமும் இல்ல.. பேச்சும் இல்ல!

மூர்த்தி:  டீவீ வேலை செய்யலேடா... பாத்து பாத்து பழகிடிச்சா ... அதான் வெறுமே பாத்துக்கிட்டிருக்கோம்!

கோபால்: டிவி ரிப்பேர் ஆனா என்னடா மூர்த்தி.... பக்கத்தில ரேடியோ  இருக்கே.... நீதான் ஆபிசில  சொல்லுவியே, உன் பொண்டாட்டி ஒரு ரேடியோன்னு!

விசாலம்: (படபடவென்று மூர்த்தியை நோக்கி கையாட்டியபடி) அடப்
 பாவி மனுஷா... உமக்கு பொண்டாட்டியா வாழ்க்கைப் பட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும்...இன்னமும் வேணும்...இவர் என்னை பொண்ணு பாக்க வந்தப்பவே என் அப்பா கிட்ட இந்த ஆளு முழியே சரியிலேன்னு தலையால அடிச்சுகிட்டேன்... இந்த பாழாப் போனவர் கிட்ட என்னை தாரை வார்த்து கொடுத்திட்டு எங்கப்பன் பரலோகம் போயிட்டாரே! ஏன்யா... நான் ரேடியோவா? அலறிகிட்டே இருக்கேனா? நான் பேசறது நாராசமா இருக்கா? அப்ப, என்னை டைவோர்ஸ் பண்ணிட்டு, ஒரு ஊமையை கட்டிக்கிரதுதானே?  ஆனா, எல்லாருமே என்னை மாதிரி ஏமாளியா என்ன, இந்த ஆளுக்குப் போய் கழுத்தை நீட்டுறதுக்கு! எனக்கு பொறந்த வீட்டில சீராப் போட்ட நகை நட்டை தவிர, இந்த மனுஷன் குந்து மணி தங்கமாவது வாங்கித் தந்தது உண்டா...இல்ல, ஆசையா நாலு இடத்துக்கு கூட்டிப் போனது உண்டா?

மூர்த்தி:  ஐயோ விசாலம்... இந்த கோபால் ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்கான்... அதான் தப்பா ஏதோ உளற்றான்.. ஏண்டா கோழி கோபால்.. பழசை சரியா கெளரிப் பாரு... நம்ம கூட ஆபீசில வேலை பார்த்த சாரதி தாண்டா தன் பொண்டாட்டியை ரேடியோன்னு சொன்னான்!

கோபால்: நீ சொல்றது பாதி சரி... சாரதி தன பொண்டாட்டியை ரேடியோ சிலோன்னு சொன்னான்.. நீ உன் பொண்டாட்டியை ஆல் இண்டியா ரேடியோன்னு சொன்னே
 !
விசாலம்: இப்படி ஆபீசில இருந்த கண்டவன் கழிசடைங்க கிட்டேயல்லாம் என்னை இளக்காரமா பேசரதுக்குத் தான் என்னோட குடும்பம் நடத்தினீரா ?  இத மாதிரி உதவாக்கரைங்களோட வெட்டிப் பேச்சு பேசித்தான் கிளார்க்காவே ரிடையர் ஆயிட்டீங்க!  நான் ஆல் இண்டியா ரேடியோன்னா செத்துப்போன உங்கம்மா கீறல் விழுந்த கிராமபோன் ரிகார்டுன்னு இந்த கோழி கிட்ட சொல்றது தானே?

(மூர்த்தி அவசரமாக எழுந்து டிவி ரிமோட்டை எடுத்து விசாலத்தின் முகத்துக்கு நேரே அழுத்த, விசாலத்தின் கையும் வாயும் மட்டும் அசைய, பேச்சு வரவில்லை!)

மூர்த்தி:  அப்பாடா...(ம்யூட்ல வச்சுட்டேன்!

கோபால்: ஏண்டா மூர்த்தி... உன் பொண்டாட்டி உன்னை திட்டறது நியாயம்... என்னையுமில்ல கழிசாடை, கண்டவன்னு பேசறா!

மூர்த்தி:  தப்புதான்டா ....உன்னை கடன்காரன்னு சொல்லியிருக்கணும்...(மேஜை மீதிருந்து ஒரு நோட்டை எடுக்கிறார்).. இங்க பாரு .. நாப்பது வருஷமா ஆபீசில டீ பிஸ்கட் வாங்கினப்பெல்லாம் 'நீ காசு குடு, அப்புறம் தரேன்'னு சொன்னே இல்லே! மொத்தம் 6575 ரூபா 20 பைசா... எடுடா பணத்த...

கோபால்:  ஏண்டா ... 10 பைசா 20 பைசாவையெல்லாம் ஜனங்க எப்போவோ மறந்துட்டாங்க...கவர்மெண்டே அச்சடிக்கிறதை நிறுத்திடுச்சு! நீ எதுக்குடா எழுதி வச்சிருக்கே? (மெதுவாக) இவன் இப்படி ஹைதர் காலத்து பாக்கியையெல்லாம் மறக்காம இருக்கான்னு தெரிஞ்சிருந்தா, எதிர் வீட்டுக்குக்கு குடி வந்திருக்கவே மாட்டேன்!

மூர்த்தி: என்ன யோசிக்கிற...நீ பிரெண்டாச்சே ... வட்டி எதுவும் போடலே!
கோபால்:  அட... நோட்டில  இன்னும் நெறைய பக்கம் பாக்கி இருக்கேடா... எழுதி முடி... மொத்தமா தாரேன்!


(மீனாட்சி கையில் தண்ணீர் தம்பளுருடன் வந்து கோபாலிடம் நீட்டுகிறாள்)

மூர்த்தி:  மீனாட்சி...இவன் என்னோட ஆபீஸ் நண்பன் கோபால்... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிறான்... எதிர் வீட்டில்தான் குடி வந்திருக்கிறான்... கோபால், தண்ணி குடிப்பா... கேன் 30 ரூபான்னு வாங்கறேம்பா! (கையில் இருந்த கடன் நோட்டை ஆட்டுகிறார்)

கோபால்: (அவசரமாக) வேணாம்... தண்ணி வேணாம்...நான் எதிர் வீடுதானே... பேப்பர் படிச்சிட்டு போயிடுவேன்... (மீனாட்சியிடம்) ஆமா... நீங்க?

மூர்த்தி: மீனாட்சி என்னோட தூரத்து உறவுடா ... இவ பையனோட இந்த வீட்டோட இருக்கா... இந்த வீட்டு நிர்வாகமெல்லாம் மீனாட்சிதான்!

கோபால்:  அப்படியா... ரொம்ப சந்தோஷம்மா... உங்க வீட்டுக்காரர்...?

மீனாட்சி:  அந்த மனுஷன் ஓடிட்டார்!

கோபால்: (யோசித்து விட்டு சிரிக்கிறார்) ஓஹோ...கிரேசி மோகன் டிராமா ஜோக்கு! ஆடிட்டரை ஓடிட்டார்னு சொல்றீங்க!

மூர்த்தி: அட... நெஜமாவே, மீனாட்சி புருஷன் நாகராஜன் எங்கியோ ஓடிட்டான்யா!

கோபால்: வெரி சாரீ
 
மீனாட்சி:மூர்த்தி அத்தான்... என் புருஷன் பேச்சை விடுங்க... விசாலம் அண்ணியை ஏன் சைலண்ட் மோட்ல வச்சிருக்கீங்க?   கை வாயை அசைச்சு ஏதோ சொல்ல நெனைக்கறாங்க..
.
மூர்த்தி: அவ சொல்லி நாங்க வாங்கி கட்டிக் கிட்டது போதும்... இப்ப பாரு.. ஆப் பண்ணிடறேன், தூங்கிடுவா!

(மூர்த்தி ரிமோட்டை அழுத்த, விசாலம் சேரில் சாய்ந்து தூங்கி விடுகிறாள்!)

கோபால்: மீனாட்சியம்மா ... நீங்க கவலையை விடுங்க.. உங்க புள்ளை இருக்கானே... உங்களை ஒரு குறையும் இல்லாம பாத்துப்பான்

மீனாட்சி: (எரிச்சலுடன்) அட போங்க... அப்பன்தான் சொத்தை முழுசா அழிச்சிட்டு ஓடிப் போனான்னா, புள்ளை எடக்கு மடக்கா பேசிக்கிட்டு திரியறான், என்னையும் சேர்த்து எல்லாரையும் பைத்தியமாக்கிறான்... இதோ வரான் பாருங்க என்னோட சீமந்த புத்திரன்!
(வேம்பு உள்ளே நுழைகிறான்)

வேம்பு :  ஹாய் மம்மி... ஹாய் மூர்த்தி அத்தான்... ஹாய் கோழி கோபால் சார்!

கோபால்: (திடுக்கிட்டபடி) என் பேரு எப்படி உனக்குத் தெரியும் தம்பி... ஒட்டுக்கேட்டியா?

வேம்பு: இல்ல... இந்த வேம்பு ஒரு துப்பறியும் சாம்பு! இந்த தெருவில எனக்குத் தெரியாம யாரும் நடமாட முடியாது!

மூர்த்தி: ஆமா.... தெரு நாய் கூடவே இவனும் இருப்பான்!

வேம்பு: நீங்க எதிர் வீட்டிலேந்து இங்க நுழஞ்சீங்க .... நான் ஜோசியம் சொல்லற ஆளா உங்க வீட்டில நுழைஞ்சு உங்க பொண்டாட்டி கிட்ட எல்லா விஷயத்தையும் கறந்துட்டேன் ... நீங்களும் மூர்த்தி அத்தானும் ஒன்னா ஒரே ஆபிசில 25 வருஷம் இருந்து ரிக்கார்ட் கிரியேட் பண்ணியிருக்கீங்க!

கோபால்: ஹி ஹி .... தேங்க்ஸ்
 
வேம்பு: எதுக்கு தேங்க்ஸ்...ஆபீஸ்ல வேலையே செய்யாம அரட்டை அடிச்சதால, அப்பப்ப மெமோ கொடுத்திருக்காங்க... இப்ப, தெனம் எங்க வீட்டில வந்து ஓசி பேப்பர் படிக்கிறதுக்காகவே எதிர் வீட்டில குடி வந்திருக்கீங்கன்னு உங்க வொய்ப்  உங்களுக்கு கான்டக்ட் சர்டிபிகேட் குடுத்திருக்காங்க!

கோபால்: (அசடு வழிய) அது அப்படியில்லடா கண்ணா.. பசங்களுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல எப்பவும் நாலு பேர் இருக்கணும்... நான் நாலாவது! ஆமா... நீ என்ன பண்ற வேம்பு?

வேம்பு: மத்த மனுஷனுங்க, ஜீவராசிங்க மாதிரி நானும் நடமாடிக்கிட்டிருக்கேன்!

மீனாட்சி: அட கிறுக்குப் பயலே... கடவுள் உனக்கு ஆறாவது அறிவை குடுத்திருக்கானே... அதை வச்சு உருப்படியா என்ன பண்றேன்னு இவர் கேக்கறார்

கோபால்: அதாவது, இன்னொருவர் தயவை எதிர்பார்க்காம சொந்தமா நாலு காசு சம்பாதிக்க நீ என்ன முயற்சி செய்யிறே!

வேம்பு: அப்ப நீங்க ஏன் சார் என் மூர்த்தி அத்தான் தயவில டீ , பிஸ்கட், பழம்னு சாப்பிட்டு கடன் வச்சிருக்கீங்க!

கோபால்: (சமாளித்த படி) இது வேற விஷயம்டா அம்பி ... நாங்க ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு... இவன் சும்மா நோட்ல கடன்னு எழுதி வச்சு தமாஷ் பண்ணறான்!

மூர்த்தி:  டேய்..டேய்.. சந்தடி சாக்கில கடனை கை கழுவப் பாக்காத!

வேம்பு:  அது! அம்மா... பசிக்குது... சாப்பாடு போடு
(தலையில் அடித்தபடி மீனாட்சி வேம்புவுடன் உள்ளே போகிறாள்... பரத் நுழைகிறான்)

பரத்: மூர்த்தி மாமா...மாடியில கேபிள் டிவி ஓயர் லூசா இருந்திச்சு... சரி பண்ணிட்டேன்.. இனிமே டிவி நல்லா தெரியும்
 
மூர்த்தி: அப்பாடா.. நாம கிரிக்கெட் மேட்சை பாக்கலாம்னு சொல்லு

விசாலம்: (எழுந்து கொண்டு) மேட்ச் ஆரம்பிச்சாச்சா .... யார் ஆடறா... டெண்டுல்கரும் ஷேவாக்குமா?

கோபால்: பேஷ் பேஷ்...அறுபதிலும் கிரிக்கெட் ஆசை வருமில்ல!

மூர்த்தி: டேய் கோபால்... இந்த பரத் எனக்கு உறவுடா . கிரிக்கெட் போர்டில வேலை செய்யிறான்.. பீ காம் படிச்சிருக்கான்
விசாலம்: எங்க பரத் வந்தா வீடே கலகலன்னு ஆயிடும்.. இவனால எங்களுக்கு கிரிக்கெட்னா என்னான்னு புரிஞ்சு போச்சு!

மூர்த்தி: அதுவும் மெட்ராசில மேட்ச் வந்தா பெரிய பெரிய ப்ளேயருங்க, மேட்ச் பாக்க வந்த பெரிய மனுஷனுங்க, சினிமாக்காரனுங்கன்னு அத்தினி பெரும் பரத் கையை பிடிச்சு குலுக்கறதை கதை கதையா சொல்லுவான்!

கோபால்: கொஞ்சம் இரு... பழசை கெளரிப் பாக்கிறேன்.... இந்த பரத்தோட அப்பாவைப் பத்தி ஏதோ முன்னாடி நீ சொன்னதா ஞாபகம்?

மூர்த்தி: (கோபத்துடன்) சொன்னேன்... அந்த வேலூர் கிருஷ்ணசாமி பத்தி பேச்சை எடுக்காத.. எனக்குப் பத்திகிட்டு வருது

பரத்:  நான் சொல்றேன் கோபால் சார்... நாங்க இவரோட அக்கா வழி உறவு.. எங்க அப்பாவுக்கும் இவருக்கும் பண விஷயத்தில ஒரு தகராறு... அன்னிக்கு எங்க அப்பா படபடன்னு பேசினது தப்புதான்... ஆனா, நான் இந்த வீட்டில எல்லாரோட சகஜமா பழகிண்டிருக்கேன்... சரிதானே மூர்த்தி மாமா!

மூர்த்தி: ஆமா...ஆமா
 (மூர்த்தியின் மகள் வீணா நுழைகிறாள்)

வீணா:  பரத்.... கிரிக்கெட் மேட்ச் இன்னும் ஆரம்பிக்கலியே ... அப்பாடா... நீயும் கரெக்டா வந்துட்டே ... விளையாடறவங்க பத்திய விஷயங்களை புட்டு புட்டு வச்சிடுவே... அப்பா.... சார் யாரு?

மூர்த்தி: (கடன் நோட்டை எடுத்தபடி) நான் முன்னே சொல்லியிருக்கேனேம்மா ... ஆபிசில கோழி கோபால்னு ... இவன்....

கோபால்: (குறுக்கிட்டு) உன் அப்பாவுக்கு க்ளோஸ் ப்ரெண்டுமா நான்!

மூர்த்தி: ஆமா..... டீ , பிஸ்கட்டை க்ளோஸ் பண்ணின ப்ரெண்ட்
                                                              /திரை- மறுபடி விலகும் /
                 

காட்சி 2:


(அதே இடம்.... விசாலம், மூர்த்தி, கோபால் ஆகியோர்)
கோபால்: (பேப்பரைப் படித்தபடி) இங்க பார்றா மூர்த்தி... பாகிஸ்தான் பந்து வீச்சில் இந்தியா திணறல்.... சேவாக், டோனி ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்
 
விசாலம்: நாசமாப் போச்சு... இவங்க ஆடலேன்னு யார் அழுதா!

மூர்த்தி: நீதான் அழுதே.... நேத்து மேட்ச் ஆரம்பிக்கச்சே 'இதோ சேவாக்கும் டோனியும் நுழையறாங்க... சிக்ஸரா அடிச்சு குவிக்கப் போறாங்க'ன்னு குதிச்சே...உடனே கரண்ட் போயி மேட்சே பாக்கல ... இப்ப என்ன ஆச்சு பார்

விசாலம்: ம்... ஒரு தரம் நன்னா ஆடறா... ஆனா, அடுத்த மேட்ச்ல சொதப்பிடறா !

மூர்த்தி: அதாண்டி கிரிக்கெட்டு..

கோபால்: இத பாருங்க... கிரிக்கெட்டும் நம்ம வாழ்க்கையும் ஒன்னு ... நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்... ஆனா எப்ப எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது!

(உள்ளிருந்து வீணா , பரத், மீனாட்சி ஆகியோர் வருகிறார்கள்)

பரத்:  மூர்த்தி மாமா.... மாடி ரூம்ல வயரிங், பைப் லைன் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன்..

வீணா:  ஆமாம்பா... மாடி ரூம் இப்ப ரொம்ப நீட்டா, சூப்பரா ஆயிடிச்சு ... சாரி பரத்.... உன்னை வேலை வாங்கி சிரமப் படுத்திட்டேன்..
 
பரத்:  ஏய் வீணா... உதை குடுப்பேன்... சாரி கேக்க நான் என்ன வேற்று மனுஷனா?

கோபால்: அதானே... ஏண்டா மூர்த்தி.. எனக்கு எப்ப உன் பொண்ணோட கல்யாண சாப்பாடு போடப் போறே ?

மூர்த்தி: உனக்கு மொய் எழுத எப்ப வசதி வருதோ,  அப்ப வீணா கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறேன்... ஆபிஸ்ல  டீ , பிஸ்கட் சாப்பிட்டதுக்கே நீ குடுக்கலே... எங்க நோட்டு (தேடுகிறார்)

வீணா: எனக்கு தெரியும்பா.... 6575 ரூபா 20 பைசா இவர் குடுக்கணும்

கோபால்: ஊன்னா கடனைப் பத்தி பேசுங்க... ஒரு வயசுப் பொண்ணு வீட்ல இருக்காளே...காலா காலத்தில ஒருத்தனுக்கு கட்டிகுடுக்கனும்னு உனக்கு தோணலி யாடா?

வீணா: (கிண்டலாக) அப்புறம், வயித்தில நெருப்பைக் கட்டிகிட்ட மாதிரி இருக்க வேணாமானு கேளுங்க சார்!

பரத்: இன்னொரு கேள்வியும் இருக்கே! பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில வச்சா பத்திக்காதான்னு கேளுங்க!

கோபால்:  மனசில இருக்கிறதை ரெண்டு பேரும் தெளிவா சொல்லிட்டீங்க! (மூர்த்தியைப் பார்த்து) ஏண்டா மரமண்டை .... இந்த ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு மாடி ரூமை ரெடி பண்ணியிருக்காங்க...பஞ்சு நெருப்புன்னு பஞ்ச் டயலாக் பேசறாங்க... இவங்க மனசில என்ன திட்டம் இருக்குன்னு உனக்குப் புரியலையா?

விசாலம்: இவர் என்ன சொல்ல வர்றாரு? மாடி ரூம் பூரா தட்டுமுட்டு சாமான் போட்டு குப்பை கூளமா கெடந்திச்சு... அதை இவங்க கிளீன் பண்ணி அழகா பண்ணியிருக்காங்க!

கோபால்:  போச்சுடா... உன் வொய்பும் ட்யூப் லைட்டு தானா... மீனாட்சியம்மா ... உங்களுக்கும் புரியலையா?

மீனாட்சி:  அதாவது, இவங்களுக்குள்ள 'அது' இருக்குன்னு சொல்ல வர்றீங்க...

வீணா:  கோபால் சார்... அது, இது, எது... இந்த மூணுமே எங்க நடுவில இல்ல!

மீனாட்சி: இல்லேன்னா, வரவழிச்சுக்குங்க... நீயும், பரத்தும் ரொம்ப நல்ல ஜோடி... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் அடிக்கடி சொல்லிக்கிட்டு வர்றேன்

பரத்:  மீனாட்சி மாமி... நானும்தான் ஏற்கெனவே பதில் சொல்லிட்டேனே... மறுபடியும் சொல்றேன்... நான் கிரிக்கெட் ஆபிஸ்ல சாதாரண வேலையில இருக்கேன்... இன்னும் பெரிய வேலைக்கு முயற்சி பண்ணி சேரணும் ... நடுவில வேற எதையும் என்னால யோசிக்க முடியல மாமி

வீணா: நானும் அப்படித்தான்... பீ. காம் முடிச்ச கையோட மேல எம். காம் சேரனும்கிறது என்னோட கனவு
 
மூர்த்தி: கேட்டுக்கிட்டாயாடா கோபால்.... இவ கல்யாணத்தைப் பத்தி எந்த யோசனையும் இப்ப எங்களுக்கு இல்ல..
(வேம்பு நுழைகிறான்)

வேம்பு: ஏய் வீணா... பரத்....ரொம்ப அலட்டிக்காதீங்க...'நீங்க மேட் பார் ஈச் அதர் ஜோடி.. கட்டிக்கீங்க, கட்டிக்கீங்கன்னு என் மம்மி புலம்பறதும்,  நாங்க அதைப் பத்தியே நெனைக்கிறதில்லன்னு நீங்க புருடா உடறதும் ... கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு... என்ன, பிலிம் காட்ரீங்களா? சரின்னு தலையை ஆட்டிட்டு போகவேண்டியதுதான!

வீணா:  அட போடா லூசு... கூத்தில வர்ற கோமாளி மாதிரி பேசாத..

பரத்:  கூல் வீணா... எண்டா வேம்பு... எங்களுக்குன்னு தனி அபிப்பிராயம் இருக்கக் கூடாதா என்ன?

வேம்பு: நான் சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறமா, கல்யாண விஷயத்தில நான் உங்களை முந்திகிட்டேன்னு நீங்க புலம்பக் கூடாது!
(எல்லாரும் சிரிக்கிறார்கள்)

வீணா: நீயே உன்னை வச்சு காமெடி பண்ணிக்கிறியா! வா.. பரத் (போகிறார்கள்)
(வேம்பு அவர்களை முறைக்கிறான்)

மீனாட்சி:  என்னடா முறைக்கிற.... ஊர் உலகத்தில வயசுப் பசங்க உன்னை மாதிரி வெட்டியாவா இருக்காங்க? உனக்கு கல்யாணம் ஒன்னுதான் பாக்கி (உள்ளே போகிறாள்)

கோபால்: (வேம்பு அருகில் சென்று) ஏன்டா கண்ணா... நீ யாரையாவது லவ் பண்றியா?

வேம்பு: ஆமா கோபால் சார்... டிசம்பர் 7ம் லவ் ஆரம்பிச்சாச்சு! 2020ஆம் வருஷம் என் கல்யாணம்!

கோபால்:  வெட்கத்தைப் பாரு... ஆனா, ஏழு வருஷம் எதுக்கு வெயிட்டிங்? நாலு காசு சம்பாதிச்சு நாலு பேரு மெச்சுகிற மாதிரி வரணும்னு ஏதாச்சும் கண்டிஷனா?

வேம்பு: வேலை, பேங்க் பேலன்சு எதுவுமே தேவையில்லை சார்... ஏன்னா, பொண்டாட்டி இருக்கிற எடத்துக்கு நான் போயி செட்டில் ஆயிடுவேன்! அங்க, நம்ம ஊர் சங்கதிங்க எதுவும் செல்லாது!

கோபால்:  என்ன கண்ணா... என்கிட்டயே தமாஷ் பண்றே! நான் காவிரி தண்ணி குடிச்சு வளர்ந்தவன்!

வேம்பு: என்னோட லவர் அல்லுவியல் பேன் தண்ணி குடிச்சு வளர்ந்தவ சார்!... அவ ஊர் பேரு ப்ராபரி !

கோபால்: அட என்னப்பா இது... வாயில நுழையாத பேரையெல்லாம் சொல்லி இப்படி கடிக்கறே?

வேம்பு:  வாயில நுழையாத இடம் மட்டுமில்ல... கொசு நுழையாத இடம்... அதனால, கடிங்கற பேச்சே இல்லே... சரி... நீங்க, என்ன மாதிரி வேலை,இல்லாமதான இருக்கீங்க.... டிசம்பர் 7ஆம் தேதி என்ன நடந்திச்சுன்னு இந்த நாடக ஆசிரியரை ஒரு ப்ளாஷ் பேக் சீன் எழுத சொல்றேன்!
                                             /திரை - மறுபடி விலகும்/ 

                                    
காட்சி 3:

(அதே ஹாலை ஒட்டிய அறை )

வேம்பு:  (இருட்டில் குரல்) கோபால் சார்.... டிசம்பர் 7ஆம் தேதி ராத்திரி 11 மணி இருக்கும்.... தூங்கிக் கிட்டிருந்த நான் ஒரு தகரக் குரல் கேட்டு எழுந்தேன்!
(திரையில் ஓளி ... வேம்பு நிற்கிறான் )

பெண் குரல்:  ஹலோ வேம்பு !

வேம்பு:  யாரு? பொம்பளை ரோபோ குரல் மாதிரி இருக்கு? ஆனா ஆளு கண்ணுல தெரியலே?

குரல்: நான் உன் எதிரதான் நிக்கிறேன் வேம்பு!

வேம்பு: எதிர டேபிள் தான இருக்கு? என் பேரு எப்படி உனக்குத் தெரியும்?

குரல்:  விளக்கமா சொல்றேன்... நான் ஒரு alien பொண்ணு!  பூமியிலேந்து செவ்வாய் கிரகத்துக்கு கெளம்பின கியூரியாசிடி ஆகாயக் கப்பல் எங்க ப்ராபரி ஊர்ல நேத்தைக்கு இறங்கிச்சு... அப்ப நான் அல்லுவியல் ஆத்தில குளிச்சிக்கிட்டிருந்தேனா... அந்தக் கப்பல்ல எழுதியிருந்த உன் பேரு பளிச்சினு என் கண்ணில பட்டிச்சு!

வேம்பு: (ஆச்சரியத்துடன்) ஆமா செவ்வாய் போன க்யூரியாசிடி கப்பல்ல என் பேரையும் எழுதச் சொல்லி நாசாவுக்கு நான் ஈமெயில் அனுப்பிச்சேன்!
குரல்:  லட்சக் கணக்கான பேர்ல உன் பேர்தான் எனக்குப் புடிச்சிது வேம்பு... ஏன்னா, போன ஜன்மத்தில நாம லவ் பண்ணியிருக்கோம்! அதை கண்டினியு பண்ண உன்னைத் தேடி இங்க நொடியில பறந்து வந்திருக்கேன்!

வேம்பு: (ஜொள்ளு விட்டபடி) ஹை .... அவ்வளவு வேகமாவா என்னை காதலிக்கிறே! உன் பேர் என்ன?

குரல்: என் பேரு கிர் கிர்.... உனக்காக கிரிஜான்னு சேத்துக்கிட்டேன்!

வேம்பு: கிர் கிர் கிரிஜா.... நீ எப்படி இருப்பே? உன்னை நான் உடனடியா பாக்கணுமே!

கிரிஜா: என்னைப் பாக்க மனுஷங்க கண்ணுக்கு பவர் பத்தாது... கவலைப் படாதே டியர்.... நாசா கிட்ட நான் உன்னை லவ் பண்றதை சொல்லிட்டேன்... அவங்க 2020 வருஷத்தில மறுபடி பூமியிலேந்து செவ்வாய்க்கு அனுப்பப் போற ஆகாயக் கப்பல்ல உன்னையும் அழைச்சிகிட்டு வர்றதா ப்ராமிஸ் பண்ணிட்டாங்க!  நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை ஆசை தீர பாத்து ரசிக்கலாம்!

வேம்பு:  ஹை ... கேக்கவே சந்தோஷமா இருக்கே கிர் கிர் கிரி...நாசா கப்பல் நம்ம கல்யாணத்தை படம் எடுத்து, அதை எங்க உலகமே பாக்கப் போகுதா!  (கெஞ்சலாக) கிர் கிர் கிரி... உன்னை பாக்கிறதுக்கு ஏழு வருஷம் வெயிட் பண்ண முடியாது... ஏன்னா , நான் இன்னும் லூசாயிடுவேன்... இப்பவே நான் உன்னைப் பாக்கிறதுக்கு வழி பண்ணேன்... ப்ளீஸ்!

கிரிஜா: ஆசையைப் பாரு! மேஜை மேல குட்டிக் கிண்ணத்தில  கொஞ்சம் எண்ணெய் இருக்கு பாரு டியர்.... அதில ரெண்டு சொட்டு உன் கண்ணில ஊத்திக்க... நான் ரெண்டு நிமிஷம் தெரிவேன்!
(வேம்பு  மேஜை மேலிருந்த கிண்ணத்தில் இருந்த எண்ணையை இரு சொட்டு கண்ணில் ஊற்றிக்கொள்ளுகிறான் )

கிரிஜா (எதிரே நின்றபடி): வேம்பு... நான் அழகா இருக்கேனா?

வேம்பு: (பார்த்துவிட்டு திடுக்கிட்டு):  ஐயையோ ... பிசாசா நீ?  வாய் மேல இருக்கு .... மூக்கு கீழ இருக்கு... கண்ணுங்க ஒன்னு மேல ஒன்னு இருக்கே?

கிரிஜா:  சாரி வேம்பு.... புரோக்ராம்ல ஏதோ தப்பு வந்திச்சு..... இரு (திரும்பி, மறுபடி வருகிறாள்) இப்ப எப்படி இருக்கேன் வேம்பு!
வேம்பு: (பயம் தெளிந்து): அப்பாடா... நீ இப்ப சூப்பரா இருக்கே கிர் கிர் கிரி ..... ஆமா, என்னப்  பத்தி நல்லா தெரிஞ்சுதான் நீ லவ் பண்ணியா?

கிரிஜா:  ஆமா... இந்த பூமியில நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாத ஆளு.... பிரம்மா ஒரு மிஷ்டேக் பண்ணிட்டாரு.... நீ செவ்வாய்க்கு வந்தா ஓஹோன்னு ஆயிடுவே!

வேம்பு:  சபாஷ்... நான் செவ்வாயில பெரிய ஆளா ஆயிடுவேனா (தயங்கிய படி) ஒரு விஷயம் கிர் கிர் கிரி... உங்க ஊருக்கு நான் வந்தப் புறம் என்னை 'இந்த வேலையை செய்... அந்த வேலையை பாரு... தண்ட சோறு திங்காத' ... இப்படியெல்லாம் சொல்லக்கூடாது... ஆமாம்..

கிரிஜா:  அப்படி எதுவும் சொல்லமாட்டேன் வேம்பு... கண்ணாடி ரூம்ல, தங்க நாற்காலியில நீ கால் மேல கால் போட்டுக்கிட்டு ஒக்காந்தா போதும்..... நீ சிரிச்சுகிட்டு கை, கால் அசைச்சுகிட்டு தமாஷ் பண்ணிகிட்டே இரு டியர்!

வேம்பு:  அய்யோடா... இதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனுமே.... அப்படியே செஞ்சுடறேன்... ஆனா கூட, கிர் கிர் கிரி.... உன் ஊர்க்காரங்க, பொழைப்புக்கு என்ன செய்வே ன்னு என்னைக்  கேக்க மாட்டாங்களா?

கிரிஜா:  கேக்கவே மாட்டாங்க வேம்பு... உன்னை வேடிக்கை பாக்க வர்றவங்க கிட்ட நான் காசு வாங்கிடுவேன்... அதில நாம ஜாலியா காலம் தள்ளலாம்!

வேம்பு: (அசடு வழிய)  அப்போ, ஜூவில பாக்கிற மாதிரி என்னைப் பாக்கப் போறாங்களா? ம்...ஒகே
 
(ப்ளாஷ் பேக் முடிகிறது.......)

வேம்பு:  புரிஞ்சுதா கோபால் சார்  .... செவ்வாயில காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதனையாளர் பட்டியலில நான் மொதல் இடம் பிடிக்கப் போகிறேன்!

கோபால்: (தலையை சொரிந்தபடி)  தம்பி..... நீ சொல்றதை நம்பவும் முடியல... நம்பாமலும் இருக்க முடியலே...

வேம்பு: என்னோட மம்மி, மூர்த்தி மாமா குடும்ப ஆளுங்க எல்லாமே இப்படித் தான் சொல்றாங்க.... 2020 செவ்வாய் கிரகத்தில இந்த வேம்பு, கிர் கிர் கிரிஜா  கல்யாண மாலையும் கழுத்துமா நிக்கிறப்ப, அட்சதை போட வருவீங்கல்ல... அப்ப, என்னோட மகிமையைத்  தெரிஞ்சுக்குவீங்க!

கோபால்:  வாஸ்தவம்தாம்பா... குரங்காட்டி குரங்கை வச்சு வேடிக்கை காட்டறது இந்த பூமியில சாதாரணம்... ஆனா, செவ்வாயில அது புதுமை...  உன்னோட மகிமைதான்!

வேம்பு: கேலி பண்ணாதீங்க கோபால் சார்... உங்க கிட்ட ஒரு விஷயத்தை ரகசியமா சொல்றேன்...2020 நாசா ஆளுங்களோட செவ்வாய்க்குப் போகப் போற கப்பல், அந்த லோகத்து மாப்பிள்ளையா என்னையும் ஸ்பெஷல் கெஸ்டா அழைச்சுக்கிட்டுப் போகப் போறது! நான் நீன்னு அந்தக் கப்பல்ல போக கோடிக் கணக்கா பணத்தைகொட்டத் தயாரா நெறைய பேர்  இருக்காங்க....அவங்களுக்கெல்லாம்  நோன்னு நாசா சொல்லியாச்சு... ஆனா பாருங்க, மேரேஜ் பார்ட்டின்னு என் கூட ஆறு பேர் வரலாம்.... உங்களையும் செவ்வாய்க்கு அழைச்சிகிட்டு போறேன்.... ரெண்டாயிரம் ரூபாதான் உங்களுக்கு செலவு....

கோபால்:  ரெண்டாயிரம் ரூபாயில செவ்வாய் கிரகத்துக்கு போறது ரொம்ப சீப்புதான்... இருந்தாலும் தம்பி,  உன்னோட கிர் கிர் கிரி வாயால என்னைக் கூப்பிட்டா நல்லாயிருக்குமேடா கண்ணா!

வேம்பு:  அதுக்கென்ன கோபால் சார்.... கிரிஜாவையே உங்களைக் கூப்பிடச் சொல்றேன்... இப்ப அவ வர்ற நேரம்தான்... அதுக்குள்ள, நான் குளிச்சுட்டு வந்துடறேன்....  என்னோட கிரிஜா வர்றப்ப நான் மாப்பிள்ளை கணக்கா இருக்கனுமில்ல!
(வேம்பு உள்ளே உள்ளே போகிறான்.... சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் தகரக் குரல் கேட்கிறது)

கிரிஜா:  வேம்பு....  உன்னோட கிர் கிர் கிரிஜா வந்திருக்கேன் டியர்....

கோபால்:  யாரு குரல் கொடுக்கிறது?   செவ்வாய் பொண்ணா வந்திருக்கிறது?

கிரிஜா:  ஆமா ... நீங்க யாரு அங்கிள்?

கோபால்:  நான் வேம்புவுக்கு அங்கிள்.... அதனால, உனக்கும் அங்கிள்!  உங்களோட லவ் ஸ்டோரி எனக்குத் தெரியும் கிர் கிர் கிரி!

கிரிஜா:  எனக்கு வெட்கமா இருக்கு அங்கிள்.... எங்க கல்யாணம் எப்ப நடக்கும்னு நான் ஆவலா காத்துகிட்டிருக்கேன்... எங்க மேரேஜுக்கு நீங்க கட்டாயம் செவ்வாய்க்கு வரணும் அங்கிள்!

கோபால்:  வரணும்னு ஆசைதான் கிர் கிர்... ஆனா, நாசா கப்பல்காரன் ரெண்டாயிரம் ரூபா கேக்கரானாமே
 
கிரிஜா:  இப்ப மூவாயிரம் ரூபா ஆயிடிச்சு அங்கிள்....ஒன்னு செய்யிறேன்.... நான் இப்பவே உங்களை செவ்வாய்க்கு ப்ரீயா அழைச்சிகிட்டுப் போறேன்!  உங்களை கண்ணாடி ரூம்ல வச்சு, தங்க நாற்காலியில உக்கார வச்சு...

கோபால்:  (பதறியபடி) தெரியும்மா.... குரங்காட்டி மாதிரி என்னை வித்தை காட்டி காசு பண்ணுவே!  வேணாம்.. வேணவே வேணாம்.... ரெண்டாயிரமோ மூவாயிரமோ கட்டித் தொலைச்சிட்டு கல்யாணத்துக்கே வர்றேன்....

கிரிஜா:  தேங்க்ஸ் அங்கிள்..... (உரக்க) வேம்பு.... நீ எங்க இருக்கே?

வேம்பு (குரல்):  கிர் கிர் கிரி.... நான் குளிச்சிட்டு ட்ரஸ் பண்ணிகிட்டிருக்கேன்..... இதோ வந்திடுவேன்

கிரிஜா: சீக்கரமா வா... நான் இப்ப செவ்வாய் லோகத்து கல்யாண ட்ரெஸ்ல வந்திருக்கேன்! டூ பீஸ் டிரஸ் டியர்!

கோபால்: (தனக்குள்) ஐயோ..... கிர் கிர் கிரி எப்படி இருப்பான்னு நான் பாத்தாகணுமே... அதுவும் டூ பீஸ் டிரஸ்னு வேற சொல்றாளே....வேம்புன்னா கண்ணில சொட்டு மருந்து போட்டுக்கிட்டு ரசிப்பான்....நான் என்ன செய்ய முடியும்?  (மேஜை மீது கிண்ணம் இருப்பதைப் பார்க்கிறார்) ஹை ... ஏதோ டேபிள் மேல கிண்ணம் இருக்கே.... எண்ணையும் இருக்கே! ரெண்டு சொட்டு விட்டுப் பார்ரா  கோபால்!

(எண்ணையைக் கண்ணில் விட்டுக்கொண்டவர் கதறுகிறார்)
ஐயையோ ..... கண்ணு எரியறதே....... வேம்பு, நீ எங்கடா இருக்கே..... சீக்கிரமா வாடா... கண்ணுல நெருப்பு கொட்டின மாதிரி எரியுதுடா.... ரொம்ப வலிக்குதுடா

கிரிஜா: என்ன ஆச்சு அங்கிள்..... வேம்பு,  சீக்கிரம் வா
 
வேம்பு: (வந்தபடி):  கோபால் சார் ... நான் வந்திட்டேன்... என்ன ப்ராப்ளம் ?

கோபால்: என்னடா... நான் துடிச்சிகிட்டிருக்கிறேன்... நீ சாவகாசமா கேக்கிறியே... கிண்ணத்து எண்ணையை நீ தடவிக்கிட்டா உனக்கு கிர் கிர் கிரிஜா பளிச்சுன்னு தெரியறதா சொன்னியே... எனக்கு மட்டும் ஏண்டா இப்படி மிளகாப் பொடி கொட்டின மாதிரி கண்ணு எரியிறது ?


வேம்பு:  ஐயோ, அங்கிள்.... இது நெஜமாவே நான் இட்டிலி சாப்பிட்டு மீதி வச்ச மொளகாப் பொடி எண்ணை !
 
/திரை - மறுபடி விலகும்/ 

No comments:

Post a Comment